Wednesday, September 5, 2018

."கப்பலோட்டிய தமிழன்" செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 146- வது பிறந்தநாள் விழா இன்று கோவை மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி நினைவு மண்டபத்தில் உள்ள வ.உ.சி அய்யா அவர்களின் உ௫வச்சிலைக்கும், அவரது நினைவாக வைக்கப்பட்டி௫க்கும் செக்கு மரத்திற்க்கும் மலரஞ்சலி வைத்து மரியாதை செய்யப்பட்டது

#NFTE_BSNL தொழிற்சங்கத்தின் சார்பில்  இன்று 05/09/2018 காலை 1030 மணியளவில்  கோவை மாவட்டச் செயலர் தோழர்
A ராபர்டஸ் தலைமையில் தோழர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

வ உ சி வரலாறு

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் எனும் ஊரில் உலகநாதன் பிள்ளை- பரமாயி அம்மையார் தம்பதியர்களுக்கு மூத்த மகனாக 05.09.1872 அன்று பிறந்தார். அடிப்படைக் கல்வியை ஒட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்வியை தூத்துக்குடியிலும், சட்டக்கல்வியைத் திருச்சியிலும் பெற்று 1895 இல் வழக்கறிஞரானார்.

சென்னையில் விவேகானந்தர் மடத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணானந்தரின் சந்திப்பு வ.உ.சியின் உள்ளத்தில் விடுதலைக் கனலை ஓங்கச் செய்தது. அதன்பிறகே அவர் வாழ்வில் புது அத்தியாயம் தொடங்கியது. பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்டத்தில் மனதைப் பறிகொடுத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காகப் பாடுபட்டார்.

தேச பக்தியும், விடுதலை வேட்கையும் வ.உ.சி.யை ஆற்றல்மிக்க சுதந்திரப் போராளியாக பரிணமிக்கச் செய்தது. ‘செங்கோலுக்கு முன் சங்கீதம் செல்லுமா?’ என அவர் தந்தை கேட்டபோது, ‘இது கொடுங்கோலுக்கு முன் புரட்சி கீதம் அப்பா’ என பதிலுரைத்தார்
‘சுதேசியம்’ என்பது சுதந்திரத்தின் திறவுகோல் என விளக்கமளித்த வ.உ.சி., ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி நாவாய்ச் சங்கம் எனும் பெயரில் கப்பல் கம்பெனியைத் தொடங்கி, ‘காலிபா’, ‘லாவோ’ என்ற இரு கப்பல்களை தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையே இயக்கச் செய்தார். வெள்ளையர் அரசுக்கு எதிராகப் பேசினாலே குற்றம் எனக் கருதப்பட்ட அந்நாளில் சுதேசி கப்பல் கம்பெனியைத் தொடங்கி, வெள்ளையருக்கு எதிராகக் கப்பலோட்டிய வ.உ.சி.யின் வீரத்தை அகிலமே வியந்து போற்றியது.
பாரதியாரின் நெருங்கிய நண்பரான இவர், தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க, சுப்பிரமணிய சிவாவுடன் இணைந்து போராடினார். அதன் ஒருகட்டமாக தூத்துக்குடியில் அந்நியத் துணிகளைத் தீவைத்து எரிக்கும் அறப்போரை 1905-ம் ஆண்டு வெற்றிகரமாக நடத்தினார் வ.உ.சி.

வெள்ளைக்கார முதலாளிகள் தூத்துக்குடியில் நடத்திய கோரல் மில் என்ற நூற்பாலை நிர்வாகத்துக்கு எதிராக தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு வ.உ.சி. தலைமை தாங்கி, தொழிலாளர்கள் சார்பாக அன்றைய சப்-கலெக்டர் ஆஷ் துரையுடன் பேசினார். இந்தியாவில் நடைபெற்ற முதல் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, தொழிலாளர்களின் கோரிக்கையை வென்றெடுக்க வ.உ.சி. துணை நின்றார்.

இந்நிலையில்தான், 1908ஆம் ஆண்டும் வ.உ.சி., சுப்ரமணிய சிவா இருவர் மீதும் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டு, சுப்ரமணிய சிவாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், வ.உ.சி.க்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை சிறையில் கல்லுடைத்து, செக்கிழுத்து சித்ரவதை அனுபவித்த வ.உ.சி, சிறைத் தண்டனையை எதிர்த்து, மேல்முறையீடு செய்ததில் தண்டனைக்காலம் ஆறு ஆண்டுகளாகக் குறைந்தது. வ.உ.சி. 1912-ம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையாகி அரசியல் துறவறம் மேற்கொண்டார்.

வ.உ.சி. மிகச்சிறந்த தமிழ் அறிஞராகவும் திகழ்ந்தார். 1935-ம் ஆண்டு சைவ சித்தாந்த நூலான சிவஞான போதம் எனும் நூலுக்கு உரை எழுதி வெளியிட்டார். மணக்குடவர் எழுதிய திருக்குறள் உரையை வ.உ.சி. பதிப்பித்தார். மனம் போல வாழ்வு, மெய்யறம், வலிமைக்கு மார்க்கம் ஆகிய நூல்களை எழுதினார். தொல்காப்பியம், இளம்பூரணர் உரையை பதிப்பித்தார். தன் சுயசரிதையை கவிதை வடிவில் முதன்முதலில் எழுதியவர் வ.உ.சி.தான்.

இப்படி நாட்டின் விடுதலைக்காக தொழில், சொத்து, சுகம், வாழ்க்கை என அனைத்தையும் தியாகம் செய்த வ.உ.சிதம்பரம் பிள்ளை 64-வது வயதில் (1936) மறைந்தார்..




No comments:

Post a Comment